ஏகாதசி விரதம் பற்றிய தகவல்கள்…

ஏகாதசி விரதம் பற்றிய தகவல்கள்

ஜீவ கோஸ்வாமியின் பக்தி ஸந்தர்ப்ப நூலில், ஸ்காந்த புராணத்தில் இருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது . ஏகாதேசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை,  சகோதரர் மற்றும் ஆன்மீக குருவை கொலை செய்தவனாகின்றான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால் கூட வீழ்ச்சியடைகின்றான் என்றும், அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதேசியன்று தானியங்கள், பருப்பு வகைகள் உள்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்கு சமைக்கப்படுகின்றன,  ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருட்களையும் வைஷ்ணவன் ஏற்ப்தில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்ட மகா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது ; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும், ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப் படுகிறான்.

(பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 15. 10 )

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றன…?

*கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றன?*
           
  *ஒருமுறை,  பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மா வான முனிவர் ஒருவர், கங்கையில் நீராட சென்றார். அப்போது, அங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள்,*
*”மாதா கங்கே, என் பாவத்தினை போக்கி காத்தருள்க” என்று கூறி நீராடினார்கள். இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள் என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?”*

*எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார். அந்நேரம் ஒரு பெண் அங்குவந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். இந்த நீர் ஓடி சென்று  கடலில் கலக்கிறது, எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூற முனிவர், அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை. நீங்கள் யார் என்று கேட்க, அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.*

*நாம் சமுத்திர தீரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார். அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான வருணனை நோக்கி தவம் செய்தார்.*
*வருண தேவனும், அவர் முன் தோன்ற, முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.*
*”வருண தேவனே, கங்கையில் ஒழுக்கிவிடும் பாவங்கள் அனைத்தும்,* *சமுத்திரத்தில் வந்து அடைகின்றன.*
*அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?*

*இதற்கு, வருண தேவன் “முனிவரே கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தையும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை. எனவே, கடல் புண்ணிய நீராடலுக்கு உகந்தது தான்”. என்று கூறி வருண பகவான் மறைந்தார்.*

*இத்துடன் தன் சந்தேகம் தீராத முனிவர், தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.*
*”சூரிய பகவானே! கடலில் சேரும் பாவங்களை  ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா?” என்று கேட்டார்.*

*அதற்கு சூரிய பகவான், முனிவரே தங்கள் சந்தேகம் யதார்த்தமானது தான் சொல்கிறேன்  என்று சூரிய பகவான் விளக்கலானார்.*
*”முனிவரே, என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள்,*
*என் உஷ்ணத்தால் என்னை நெருங்கு வதில்லை. இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது”. உடனே, முனிவர்*
*”அப்படியென்றால், இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது” என்று கேட்க”, அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்து கொள்ள லாம்”, என்று கூறி மறைந்தார் சூரிய தேவன். உடனே, முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார்.* *முனிவரின் சந்தேகத்தினை அறிந்த மேகம், “முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது.*

*ஆனால், அதன் தாக்கம் அதிகரிக் கும்போது, மழை பெய்விக்கப் படுகின்றது. அங்ஙனம் மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப் படுகின்றன. அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக் கொள்கிறாள்.” ஆகவே, தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள்” என்றது மேகம்.*
*எனவே, தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார்.*

*முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார்.*
*”முனிவரே, பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு, மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும், நான் உட்கொண்ட பாவங்கள், என்னில் தங்குவதில்லை என்பதை நீங்கள் அறிந்தாலும். அத்தகைய பாவங்கள், மரம் செடிகள் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து, அதன் காய் கனிகளில் அடைத்து விடுகின்றது.*

*அக்காய் கனிகளை சம்பந்தப்பட்ட மனிதர்கள் உண்ணும் போது மீண்டும் அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மீண்டும் கங்கைக்கு சென்று பாவத்தை போக்கி கொள்கின்றனர்.*

*இங்கனம், மேற்கொண்ட பாவங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் வந்தடையும். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?*

*”இல்லை பூமி மாதா” என்றார் முனிவர். என்றால், “நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள், அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால், முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும்”, என்றார் பூமி மாதா.*

*இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே, அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி, இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம்?” என்று வினவ. “நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன், தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள்”, என்று முனிவர் கேட்க, தன் சுயரூபத்தை காண்பித்து, நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார். இதனால் மகிழ்ச்சியுற்றy முனிவர், “மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால், கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா?*

*”முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது, அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன், சிவபெருமான்: தேவி, கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில் புண்ணி யாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும்.*

*அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் ஒழுகிவரும் பாவங்களின் ஒரு பாகம், அந்த புண்ணியாத்மா வின் புண்ணியத் திற்கேற்ப, எரிந்து நாசமாகிறது.*

*”முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?” என்று கங்காதேவி கேட்க, “ஆம்” என்றார் முனிவர்.*

*”அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக் கொண்டேன்”  என்று தேவி கூற. “நிச்சயமாக செய்கிறேன்”, என்று கூறி முனிவர் நீராட சென்றார்.*

*பொறுமையை விட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்.*

மருதாணியின் மகிமை…

மருதாணி

அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி  வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக்கொண்டு பூஜிக்கலாம்.

சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தைக்காக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார். 4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள்  ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்கவேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன் நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர், புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப்பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5ஆம்வாரம்  பூர்த்தி செய்ய முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார். அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை..

நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்..  ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!



மருதாணியின்மஹிமை
=======================

ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.

“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்
கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

பிரச்சினை இல்லாத வாழ்க்கை எவ்வாறு இருக்கும்…?

ஒரு குட்டிக் கதை…!
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்?
நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான்.

கடவுள் உடனே, “அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன் ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா,
உன் மழையும் காற்றும்!
நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோது தான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்? பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்…!

அமாசோம விரதம்-

-அமாசோம விரதம்-

         சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.

அமாவாசையன்று, கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு  ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும்.

அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம்.

மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.

அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது  அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன்,

அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு “இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை’ என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது; தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.

அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய்- தோஷங்கள் விலகும்; புதன்- வியாபாரம் பெருகும்; வியாழன்- கல்வி வளரும். வெள்ளி- சகல சௌபாக்கியங் களும் கிட்டும்; சனி- சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை யும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி  108 முறை வலம் வரவேண்டும்.

“மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:’

இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு  தானமாக அளிக்கவேண்டும். இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்; மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண் களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பைக் கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு.

அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

ஆத்மார்த்தமாக மேற்கூறிய வண்ணம்,

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:’

என்னும் மந்திரத்தை உச்சரித்த வண்ணம், தம்பதி சமேதமாக, அதிகாலை வேளையில், அதாவது சூரிய உதய சமயத்தில், அரசமரத்தை வலம் வரவேண்டும். அப்போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்து கொண்டு, பரிகாரம் நிறைவடைந்த பின்னர், செல்போன் சுவிட்ச் ஆன் செய்து கொள்ள வேண்டும். செல்போனில், மற்றவருடன் பேசியபடி வலம் வருவது பிரயோஜனம் இல்லை.

கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்குமா…?

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார்
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களா? ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார் 

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் “ என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லை யா? “ என வினவினார். அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவர் சொன்னார் ” குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “

என சொல்லி அழைத்து சென்றார்

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும் ….

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா…?

*#பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?*

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைத் தடை செய்து ஆசாரியர்கள் விதி வகுத்துள்ளனர். ஆண்களும் சரியான விதிமுறைப்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை என்றும் நாம் காண்கின்றோம்.

“உரசா சிரசா வாசா
மனசானுஞ்சலிகா
திருஷா பிரணாமோ
அஷ்டாங்க ஈரித:”

என சாஷ்டாங்க நமஸ்காரத்தைக் குறித்து கூறப்படுவது. மார்பு, நெற்றி, வாக்கு, மனசு, தொழுகை, கண், கால்முட்டு என்பவை சாஷ்டாங்க நமஸ்காரத்தில் உபயோகிக்கும் எட்டு உறுப்புகள். நமஸ்கரித்து கிடக்கும் போது இரண்டு கால்களின் பெருவிரல்கள் இரண்டு கால் முட்டுக்கள், மார்பு, நெற்றி என்ற நான்கு பாகங்கள் மட்டுமே தரையில் தொடலாம் என்றும் போதித்துள்ளனர். கைகள் தரையில் தொடாமல் இவ்வாறு கிடக்க முடியாதென்பதால் கவிழ்ந்து கைகளை எடுத்து தலைக்குமேல் நீட்டி வணங்குவதுதான் சாஷ்டாங்க நமஸ்காரம். தரையில் தொட்டிருக்கும் நான்கு பாகங்களும் தொழும் கையும் சேர்ந்து ஐந்தங்கமாகும். எஞ்சிய மூன்றும் வாக்கு, கண், மனது என்பவையாகும். அதில் வாக்கினால் மந்திரம் சொல்லி, கண்களால் தேவனைப் பார்த்து மனதால் தியானிக்க வேண்டும். இவ்வாறு கவிழ்ந்துபடுத்து செய்வதனால் மார்பில், அழுத்தி அசௌகரியம் உண்டாவதால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களைத் தவிர்க்கவே பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாகாது என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. நவீன மருத்துவத்துறையும் இவ்விதியை ஆமோதிக்கும். கருப்பையின் நன்நிலைக்கு இவ்வித நமஸ்காரம் தீங்கிழைக்கும் என்று கூறுகின்றது. கருப்பைக்கு இடம் பெயர்தலும் நிகழலாம் என்றும் இது கீழே தள்ளிவரும் ஆபத்தான நிலை பல பெண்களிலும் காணப்படுவதாகவும் கண்டரிந்தனர். ஆனால் பெண்கள் குனிந்து வணங்கலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. இது கருப்பையின் நன்னிலைக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மையானதாகக் கருதுகின்றனர்.

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டியவை!

*உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!*

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டியவை!

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.

எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது.

உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது.

வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

உணவு உண்ணும் போது
பேசக் கூடாது,

படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊன்றக் கூடாது.

டி.வி மற்றும் மொபைல் போன் பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

நின்று கொண்டு
சாப்பிக் கூடாது.

அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக்கூடாது.

இலையைத் துடைத்து வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ
அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

உண்ணும் தட்டில்
அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

அதேபோல், உணவு உண்ணும் தட்டை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

சாதாரண உணவு இறைவனின் பார்வைக்குப் போனதும் பிரசாதமாகி விடும்;

தண்ணீர் தீர்த்தமாகிவிடும்.

அப்படி இறைவனுக்கு நைவேத்தியமான உணவை உட்கொள்ள, அது நம் உடலுக்குப் பெரும் சக்தியைத் தரும்.

ஆகவேதான், நமக்கு அனுதினமும் படியளக்கும் பரமனுக்கு நம் உணவை அர்ப்பணித்துவிட்டுச் சாப்பிடும்படி அறிவுறுத்தி
இருக்கிறார்கள் நமது முன்னோர்.

உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவிர்
ப்ரம்மாக்னௌ ப்ரம்மனாஹூதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா
சாந்தி  சாந்தி சாந்தி:

ஸ்லோகத்தின் கருத்து: எனக்குள் இருக்கும் பிரம்மத்துக்கு இந்த பிரம்ம ஹவிசை, ஆஹூதி செய்கிறேன்.

இந்த ஹவிசானது பிரம்மத்தை அடைந்து சாந்தி பெறச் செய்யட்டும்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, நம் அந்தராத்மாவை பிரம்மமாகக் கருதி,
நமது உணவை ஹவிஸாக சமர்ப்பித்து விட்டு உண்பதால், உணவின் சக்தி பெருகும். உணவில் ஏதாவது குற்றமிருந்தாலும் நீங்கிவிடும்.

*அந்த உணவால் உடம்புக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் நல்லதே விளையும்.*

மறைக்கப்படும் தமிழனின் அறிவியல்…

மறைக்கப்படும் தமிழனின் அறிவியல்!

முருகன் மயிலில் உலகை சுற்றி வந்தான் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழன் எழுதி வைத்தான்.

அதாவது மற்ற இனங்கள் காட்டிலே மிருகங்கள் போல கூட்டம் கூட்டமாக நடந்து திரிந்த காலத்தில் தமிழன் பறந்து உலகை சுற்றுவது பற்றி எழுதி வைத்துள்ளான்.

மற்ற இனங்கள் ஒரு துவிச்சக்கர வண்டியைக்கூட அறியாத காலத்தில் தமிழன் மயில்வாகனம் என்று பறக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளான்.

வாகனம் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழன் கண்டு பிடித்ததுதான் vehicle என்று ஆங்கிலமானது.

எவ்வளவோ பறவைகள் இருக்க ஏன் மயில் பறக்கும் வாகனமானது?

இன்றைய விமானங்கள் நூறு வருடங்களுக்கு முன்புதான் கண்டு பிடிக்கப்பட்டது. இன்றைய விமானத்தின் அமைப்பு அப்படியே மயிலை ஒத்தது.

விமானத்தை சமப்படுத்த மயிலின் இறகுபோல விமானத்திலும் இருபக்கமும் இருக்கும் அமைப்பு. மயில் தோகை வால் பகுதியில் இருப்பது போல விமானத்தின் பிற்பகுதியில் விமானத்தை உந்தச்செய்யும் அமைப்பு என தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்துத்தான் இன்றை விமானம் கண்டு பிடிக்கப்பட்டது.

இராமாயணம் கூட 20 ஆயிரம் வருடங்களுக்கு முந்திய கதை. அதிலே சொல்லப்படும் ஒரு பாடலை பாருங்கள்,

“தோகை வாகை சுழல் வாயு
தசம தலையன் வான் தொட
ஆழி மலையென அடியெடுத்து தோற்ற”

தோகை : மயில் தோகை
வாகை: மயிலின் இறகு

அதாவது இறகும் , தோகையும் சுழலும் வாயுவில் அதாவது காற்றில் தசம தலையன் அதாவது பத்து தலை இராவணன் வானை தொட ஆழி எனப்படும் கடல் மலைபோல் பெரிய அலையை ஏற்படுத்தி தோற்றுபோனது.

20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழனிடம் விமானம் இருந்தது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?

அந்தக்காலத்திலேதானே பெற்றோலே இல்லையே , பிறகெப்படி விமானம் பறந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அது நியாயமானதுதான்.

அதற்கு நான் சொல்லும் பதில் உங்களை இன்னும் ஆச்சரியப்படுத்தும்.

மயிலின் தோகையை உற்று பாருங்கள். அப்படியே சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் சோலர் ஒன்றை உற்றுப் பாருங்கள். மயில் தோகையில் இருக்கும் அதே கோடுகள் சோலரிலும் இருக்கும். ஆம் இராவணனின் விமானம் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரித்தே பறந்தது.

முருகன் காரணமில்லாமல் மயிலை வாகனமாக்கவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இராமாயண காலத்தில் பாவனையில் இருந்த விமானம் ஒன்றின் பகுதிகளை அகல்வாராச்சியின் போது ஆங்கிலேயர் கண்டு பிடித்தனர். அது இலங்கை சிகிரியாவை அண்மித்த காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.

சிதைந்து இருந்த அந்த விமானத்தின் பகுதியை வைத்து ஆங்கிலேயர் அதன் முழு உருவத்தை மீள் அமைத்தனர். அப்படி மீள் அமைக்கப்பட்ட விமானத்தின் படத்தை இணைத்துள்ளேன். இதை அடிப்படையாக வைத்தே ரைட் சகோதரர்கள் விமானத்தை தயார் செய்தனர்.

உண்மையில் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடிக்கவில்லை, தமிழன் 20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கண்டு பிடித்ததை மீள் உற்பத்தி செய்தனர்.

ஆங்கிலேயர் இப்படி ஒரு விமான சிதைவு கண்டு பிடித்த கதையையே மறைத்து தமிழருக்கு துரோகம் செய்து விட்டனர். இப்போதுதான் இந்த புகைப்படமே வெளிவந்துள்ளது.

இதை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வுக்கட்டுரையை கிரேட் பூல் என்ற அமெரிக்க ஆய்வாளர் எழுதியுள்ளது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. அந்த ஆய்வுக் கட்டுரையை முதல் கமெண்ட்டில் இணைத்துள்ளேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் வாசித்துப் பாருங்கள். தமிழனின் அறிவியலில் உங்களுக்கு புல்லரிக்கும்.

விவேகானந்தரின் அந்திமகாலம்…

விவேகானந்தரின் அந்திமகாலம்…



தாம் உடலை விட இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நின்றார்.

மடத்து நிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வில்வமரம் ஒன்று இருந்தது. அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம்.

அந்த வில்வமரத்தைச் சுட்டிக்காட்டி தாம் தேகத்தை விட்ட பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்து விடும்படி சுவாமிகள் உத்தரவிட்டார்.

இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு என்ன விடை சொல்வது என்று விளங்கவில்லை.

சடலத்தைத் துறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு சுவாமிகள் தாமே அமுது சமைத்து அதைத் தமது சிஷ்யர்களுக்கு வழங்கினார்.

சிஷ்யர்களுக்குத் தம் கைப்படப் பரிமாறினார். உணவு அருந்தியான பின்பு கையலம்புதற்குத் தாமே நீர் வார்த்தார்.

ஜூலை 4ஆம் நாள் அமெரிக்கா சுதந்திர தினமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரில் அமெரிக்க சிஷ்யர்களுடன் அவர்களது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிய போது சுவாமிகள் அதே ஜூலை 4 ஆம் நாள் நான்கு ஆண்டுகள் கழித்து தமது மேனியினின்று விடுதலை பெறப்

போவதாக தெரிவித்திருந்தார்.

அவர் குறிப்பிட்ட நாள் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இப்போது வருவதாயிற்று. இந்த நாளை பஞ்சாங்கத்தில் விடுதலைக்குரிய

நாளாகக் குறிப்பிட்டு வைத்திருந்தார். அன்று சிவராத்திரி.

ஜூலை 4ஆம் நாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் 8 மணியிலிருந்து 11 மணிவரை குருதேவரது பூஜையறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு தியானம் செய்தார். ஜன்னல்களையும் மூடி வைத்துக் கொண்டார்.

இறுதிக் காலத்தில் சிறிது ஆகாரத்தை உண்பவர் வழக்கத்துக்கு மாறாக நண்பகலில் தமது குரு சகோதரர்களுடனும், சிஷ்யர்களுடனும் பந்தியில் அமர்ந்து ஆகாரம் ஏற்கலானார்.

அவ்வேளையில் குதூகலமாக அனைவருடனும் உரையாடியது

பந்தியில் இருந்தவர்களுக்கெல்லாம் பரமானந்தத்தை ஊட்டியது.

நண்பகல் ஆகாரத்திற்குப் பிறகு சிஷ்யர்களை ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் பற்றி சுவாமிகள் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அன்று மாலையில் தமது குரு சகோதரர் பிரேமானந்த சுவாமிகளைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுவாமி விவேகானந்தர் இரண்டு மைல் தூரம் வெளியில் சென்று உலாவி வந்தார்.

மடத்துக்குத் திரும்பி வந்த சுவாமிகள் கங்கைக் கரையோரம் அமர்ந்து அனைவருடனும் ஆனந்தமாக உரையாடினார்.

சந்தியா வேளை வந்தது. குருதேவர் ஆலயத்தில் ஆராதனைக்கான மணி அடிக்கப்பட்டது.

எல்லாரையும் அதில் கலந்து கொள்ளும்படி பணித்தார். சுவாமிகள் தனியாக தியானம் செய்ய தமது அறைக்கு பிரம்மச்சாரி ஒருவருடன் சென்றார்.

அறையினுள் ஆசனம் விரித்து கிழக்கு

முகமாக கங்கையை நோக்கிய விதத்தில் சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். சுமார் 8 மணிக்கு அந்த பிரம்மச்சாரியை அருகில் அழைத்துத் தமது தலைக்கு மேலே விசிறி வீசும்படி வேண்டினார்.

பிறகு “தியானம் செய்து கொண்டு வாயிலில் காத்திரு” என்று சுவாமிகள் பணிவிடை செய்து வந்த பிரம்மச்சாரிக்குப் பகர்ந்தார்.

இதுவே சுவாமிகள் பேசிய அருள் உரைகளில் இறுதியானது.

இரவு 9 மணி 10 நிமிடங்களுக்கு சுவாமிகள் அகண்ட சச்சிதானந்தத்தில் நிர்விகல்ப சமாதி எய்திவிட்டார் .

சாய்ந்து ‌கிடந்த சரீரத்துக்கு என்னென்னவோ சிகிச்சை முறைகளை டாக்டர்களும், மற்றவர்களும் கையாண்டு பார்த்தார்கள்.

நாசித் துவாரத்திலும், நாவிலும் இரண்டொரு துளி இரத்தம் கட்டியிருந்ததாகத் தென்பட்டது.

குண்டலினி சக்தி பிரம்மரந்திரத்தைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கிச் சென்றதன் புற அடையாளமாக அது நிகழ்ந்திருக்கலாம்.

இதைப் பற்றிய செய்தி தந்தி வாயிலாக உலகில் பல இடங்களுக்குப் பறந்தது. கணக்கற்றோர் மறுநாள் காலையில் கல்கத்தா வந்து கூடினர்.

ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருந்த திருமேனியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வணங்கினர்.

அன்று மாலை கங்கைக் கரையோரம் வில்வமரத்தடியில் அம்மேனியானது அக்னி பகவானுக்கு அர்ப்பிக்கப்பட்டது.

நான் விரைவில் உடலை உகுத்து விட்டு உருவமற்ற ஓசையாக இலங்குவேன்.

I shall be a voice without form” என சுவாமிகள் சில நாளைக்கு முன்பு பகிர்ந்திருந்தார்.


அறிவோம் ஆன்மீகம்